”தமிழ்நாட்டிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு”..!! மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி..!!
புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஏற்கனவே தமிழ்நாட்டில் நோய் தொற்று பரவுவது குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், அரசும் சுகாதாரத்துறையும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாடு அரசு காய்ச்சல் தொடர்பான உண்மையான தரவுகளை மூடி மறைக்கிறது.
தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஒரே நாளில் 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 768 கொரோனா பாதிப்பை கேரளா அரசு உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. என்ன மாதிரியான காய்ச்சல் என்பதை கண்டறிய தமிழ்நாடு அரசு சோதனைகளை மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் எந்த மாதிரியான காய்ச்சல் பரவுகிறது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
ஒமைக்ரான் வைரஸின் புதிய வகையான JN1 தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இதனை அரசு கண்டு கொள்ளாமல் விட்டால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வரும் நிலையில், விமான நிலையங்களில் சோதனையை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
பொதுமக்களிடம் சுயமாக மருந்துகளை உட்கொள்ள கூடாது என்று தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று மருத்துவமனைகளிலும் பேராசிட்டமால், சீராய்டு உள்ளிட்ட மருந்துகளை அதிகம் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.