பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக பிரதமர் மோடி கூறிய விமர்சனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி ராணுவ விமானங்களை பயன்படுத்துவதற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் அளித்துள்ள புகாரில், ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்’ என புகார் அளித்தனர்.
மேலும், மோடியின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. நாட்டின் பிரிவினைக்கு காரணமாக இருந்த முஸ்லிம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிடுவதாகவும், குறிப்பிட்ட இனம் சார்ந்த பிரசாரங்களில் பிரதமர் மோடி ஈடுபடுவதாகவும் தனது புகாரில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.