குட் நியூஸ்...! ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் கன்பார்ம்...!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து பயணிகளும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறலாம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தினமும் லட்சக்கணக்கான இந்தியர்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியம். ரயிலில் பயணிக்கும் பலர் உறுதியான டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்து சமூக வலைதளங்களிலும் மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு முன் முன்பதிவு செய்தாலும், அவர்களின் டிக்கெட் காத்திருப்பது பல நேரங்களில் நடக்கும். ஆனால், இப்போது இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து பயணிகளும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறலாம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் உறுதியான டிக்கெட்டுகளைப் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்வேயின் திறன் அதிகரிக்கப்படும், ரயில்வேயில் பயணம் செய்ய விரும்புவோர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை எளிதாகப் பெற முடியும்' என்றார். கடந்த பத்தாண்டுகளில் ரயில்வேயின் வளர்ச்சியின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றார்.
இதற்கு உதாரணமாக, 2004 முதல் 2014 வரை 17,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மட்டுமே அமைக்கப்பட்டன. அதே நேரத்தில், 2014 முதல் 2024 வரை 31,000 கிலோமீட்டர் புதிய பாதைகள் கட்டப்பட்டன. 2004 முதல் 2014 வரை சுமார் 5,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன, கடந்த 10 ஆண்டுகளில் 44,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2004-2014 வரை 32,000 பெட்டிகள் மட்டுமே கட்டப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில் 54,000 பெட்டிகள் கட்டப்பட்டுள்ளன என்றார்.