கடந்தமுறை வாக்களித்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய புகார்..! தேர்தல் அதிகாரி கூறுவதென்ன…?
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலின் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அமைதியாக நடந்த வாக்குபதிவில், சில இடங்களில் கடந்த முறை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் தோற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, இல்லை நீக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று தான் செப்டம்பர் மாதத்திலிருந்து வலியுறுத்தி வந்தோம். கடைசியாக பெயர் நீக்க, சேர்க்க மார்ச் 20ஆம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. இறுதி நேரத்தில் வாக்காளர் பாட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு வசதி இல்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள் தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.