ஒரே தொகுதிக்கு போட்டிபோடும் கூட்டணி கட்சிகள்…! சிக்கலில் பாஜக கூட்டணி..!
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியில், பாராமதி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து மோதல் வெடித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியில் மோதல் நிலவுகிறது. பாரதிய ஜனதா, சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியில், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா போட்டியிடுகிறார்.
ஆனால் அதே பாராமதி தொகுதியில் போட்டியிடுவதாக, மகாயுதி கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின், விஜய் ஷிவ்தாரே வேட்புமனு தாக்கல் செய்வதாக உறுதியளித்துள்ளார். இதனையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, விஜய் ஷிவ்தாரேவை பதவி நீக்கம் செய்யவில்லை என்றால் மகாயுதி கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) விலகுவதாக எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மகாயுதி கூட்டணியில் சிக்கல் நிலவி வருகிறது.