CAA சட்டத்தை தடுத்து நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை..!! அண்ணாமலை கடும் தாக்கு..!!
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. இருப்பினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.
இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிஏஏ யாருக்கும் எதிரானது கிடையாது. அது, மத்திய அரசின் முழு அதிகாரத்தில் இருக்கக் கூடிய சட்டம். சிஏஏவை நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?. முதல்வர் வரலாற்று புத்தகத்தை படிக்க வேண்டும். மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மத்திய, மாநில அரசுகளுக்கு சேர்ந்து என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதல்வராக எதிர்க்கிறேன் என்றால் சரி. தமிழ்நாட்டுக்குள் விட மாட்டேன் என்று சொல்ல அவருக்கு அதிகாரம் கிடையாது” என்றார்.