தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகள்... உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது வழக்கு பதிவு...!
தேர்தல் பிரச்சாரத்தில் சிறார்களை பயன்படுத்தியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஹைதராபாத் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாதவி லதா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் நிரஞ்சன் ரெட்டி அளித்த புகாரில், மே 1 அன்று லால்தாவாசாவிலிருந்து சுதா டாக்கீஸ் வரை நடந்த பாஜக பேரணியின் போது, குழந்தைகள் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் மேடையில் இருந்தனர். குழந்தை பாஜக சின்னத்துடன் காணப்பட்டதாக நிரஞ்சன் ரெட்டி குற்றம் சாட்டினார்.
தேர்தல் குழுவிடம் அவர் புகார் செய்ததைத் தொடர்ந்து, தலைமை நிர்வாக அதிகாரி அதை உண்மை நிலையை கண்டறிய நகர காவல்துறைக்கு உத்தரவிட்டார்., இதன் விளைவாக மொகல்புரா காவல் நிலையத்தால் அமித் ஷா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் டி யமன் சிங் மற்றும் பாஜக மூத்த தலைவர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டி.ராஜா சிங் ஆகியோர் அடங்குவர். ஐபிசி பிரிவு 188 (அரசு ஊழியர் ஒருவர் பிறப்பித்த உத்தரவை மீறியது) கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.