For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Farmers Protest: விவசாயிகளுடன் நள்ளிரவு பேச்சுவார்த்தை.! தீர்வை எட்டியதா.?… மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி.!

10:21 AM Feb 19, 2024 IST | 1newsnationuser4
farmers protest  விவசாயிகளுடன் நள்ளிரவு பேச்சுவார்த்தை   தீர்வை எட்டியதா  … மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
Advertisement

குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இலவச மின்சாரம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் 'டெல்லி சலோ' என்ற பெயரில் மிகப்பெரிய போராட்டம் (Farmers protest) நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை இவர்கள் டெல்லியை நோக்கி பயணத்தை தொடங்கினர். விவசாயிகளின் பேரணி பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் போற்றும் ஹரியானா மாநில எல்லையில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.

Advertisement

மத்திய அமைச்சர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நான்கு மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அரசின் திட்டத்தை விவசாயிகளிடம் முன்மொழிந்ததாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக செக்டார் 26ல் உள்ள மகாத்மா காந்தி மாநில பொது நிர்வாக நிறுவனத்திற்கு வந்தனர். இவர்கள் அடங்கிய குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

விவசாயிகளுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், "விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்ய குழு முன்மொழிந்துள்ளது" இன்று தெரிவித்துள்ளார்.

'NCCF' (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) மற்றும் 'NAFED' (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) போன்ற கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மசூர் பருப்பு மற்றும் சோளம் போன்றவற்றை விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என்று கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொருட்கள் வாங்குவது தொடர்பான எந்த ஒரு வரம்பையும் அரசு விதிக்காது எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்பந்தங்களை முறைப்படுத்துவதற்கு தனி பிரிவு அமைக்கப்படும் எனவும் கோயல் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் விவசாயம் காப்பாற்றப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் மேம்படும். மேலும் நிலங்கள் தரிசாக மாறாமல் தடுக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்த விவசாயிகள் தலைவர்கள், அரசின் முன்மொழிவு குறித்து அடுத்த 2 நாட்களில் தங்கள் மன்றங்களில் விவாதித்து அதன் பிறகு எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் " அரசின் இந்த முன்மொழிவு குறித்து 19 மற்றும் 20 தேதிகளில் எங்கள் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடி மற்றும் பிற கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளது.அடுத்த 2 நாட்களில் இவை தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். 'டெல்லி சலோ' போராட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்களது அனைத்து பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று பாந்தர் தெரிவித்துள்ளார்.

English Summary: Central ministers team held a talk with farmers regarding their demands and proposed a solution.

Tags :
Advertisement