முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

CAA சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு!

07:05 PM May 15, 2024 IST | Mari Thangam
Advertisement

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது.

Advertisement

சிஏஏ சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியர், ஜெயின், பார்சி, பவுத்தம் மற்றும் கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையினர் இந்தியாவில் குடியுரிமை பெறலாம்.

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இதற்கு 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.  இந்தச் சட்டமானது வங்கதேசம்,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014,  டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.  அதாவது ஹிந்து,  கிறிஸ்தவர்கள்,  சீக்கியர்கள்,  சமணர்கள்,  பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

இஸ்லாமியர்கள் மட்டும் விடுபடுவதை எதிர்த்து 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.  டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது.  இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மார்.11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து தகுதியுடையவர்களிடமிருந்து குடியுரிமை சான்றிதழுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் தொகுப்பாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவற்றை, மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பயனாளிகளுக்கு வழங்கினார்.

சிஏஏ சட்டம் இந்தியா முழுவதும் தீவிர விவாதம், பரவலான எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு வித்திட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், "மத்தியில் இந்தியக் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்” என கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
citizenship certificate
Advertisement
Next Article