தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... CBI விசாரிக்க வேண்டும்...! மாயாவதி கோரிக்கை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜை பலப்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங் மரணம் கட்சிப் பிரச்னை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்னை. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும். தலித் மக்களை முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.