மீண்டும் பின்னடைவு...! ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு...! உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு...!
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தனக்கு பிணை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
2011-2015 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்கு வரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடு பட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று வரை ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார்.
கரூரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த புதிய பங்களாவில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பினர். ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகாமல், தொடர்ந்து 10 மாதங்களாக தலை மறைவாகவே இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் பிணை வழங்க கோரியும் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தனர் செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் அடுத்த முறை நிச்சயம் விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளனர்.