BJP: திமுகவின் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க துணை ராணுவப் படை...!
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் திமுகவின் பணப்பட்டுவாடாவைக் கண்காணிக்க துணை ராணுவப் படைகளை நிறுத்துமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
தி.மு.க., தங்களுக்கு ஆதரவாக, அனைத்து அரசு இயந்திரங்களையும் தவறாக பயன்படுத்த துவங்கிவிட்டதாகவும், கடந்த 3 நாட்களாக, சென்னை வடக்கு பகுதியின் பல்வேறு இடங்களில், ஓட்டுக்கு பணப்பட்டுவாடா உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்று மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம் சாட்டினார். பண விநியோகம் எங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் திமுகவினர் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், மாநில காவல்துறை மற்றும் ரவுடிகள் உதவியுடன் மின்சாரத்தை நிறுத்திவிட்டு ஓட்டுக்காக பெரும் தொகையை வழங்குகிறார்கள் என்று கூறினார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், பா.ம.க.,வுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு, பாரம்பரிய அ.தி.மு.க., வாக்காளர்களை விட, காசு அதிகம் கிடைக்கும். இதை அறிந்த தி.மு.க.,வினர், பா.ஜ.க வாக்காளர்களை வாக்களிக்க விடாமல், ஓட்டுப்பதிவு நாளில், வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளனர் என்றார்.
தி.மு.க.,வின் கட்டுப்பாட்டில் மாநில காவல்துறை இருப்பதால், கொளத்தூரில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தி.மு.க.,வின், 38 எம்.பி.,க்களால், எந்த பயனும் இல்லை என்பதை, தமிழக மக்கள் நன்கு அறிவர். மத்தியில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர் என்றார்.