அவசியமற்ற துபாய் பயணத்தை தவிர்கவும்! - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
ஐக்கிய அரசு அமீரகத்தில் கனமழை பெய்து வருவதால், அவசியற்ற துபாய் பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு இந்தியப் பயணிகளை இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய பயணிகளுக்கு புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், "ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்பாராத விதமாக பெய்த கன மழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உள்வரும் விமானங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைத்துள்ளது.
நிலைமையை சரி செய்து மீண்டும் பழையபடி சேவையை வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீகரக அதிகாரிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். இந்நிலையில், விமானம் புறப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடமிருந்து இறுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விமான நிலையத்திற்கு செல்லுமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
துபாய் விமான நிலையம் இயல்பு நிலைக்கு வரும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய குடிமக்களுக்கு உதவ, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அவசர உதவி எண்களை அறிவுத்துள்ளது. அதன்படி, +971501205172, +971569950590, +971507347676, +971585754213 என்ற எண்களை உதவிக்காக தொடர்புகொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.