Rain..! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி... இந்த 13 மாவட்டத்தில் வெளுக்கும் கனமழை...!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.