'இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!!' பேரவையில் எதிரொலிக்குமா கள்ளச்சாராய விவகாரம்? அனல் பறக்கப்போகும் விவாதங்கள்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.
தமிழக அரசின் சட்டசபை ஆண்டுதோறும் ஜூன் மாதம் கூடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டம் வரும் ஜூன் 20ம் தேதி கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, தமிழக சட்டசபை கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடுகிறது. முதல் நாளான இன்று முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை தள்ளிவைக்கப்படும்.
நாளை காலை நீர்வளம், தொழிலாளர் நலத்துறை மானியகோரிக்கை, மாலையில் வீட்டுவசதி, மதுவிலக்கு - ஆயத்தீர்வை, மாற்றுத் திறனாளிகள் நலம், சமூகநலத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். பேரவை கூடும் நேரத்தை காலை 9.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 முதல் 8 மணி வரை என மாற்றுவதற்கான தீர்மானம் நாளை காலை கொண்டுவந்து நிறைவேற்றப்படும். இதை பின்பற்றி, வரும் ஜூன் 29-ம் தேதி வரை காலை, மாலை இரு வேளையும் பேரவை கூட்டம் நடைபெறும்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்தும் மாநிலம் முழுவதும் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க ஆளும் தரப்பும் தயாராகி வருகிறது.
Read more ; மெத்தனால் கலந்த விஷச்சாராயம், 34 பேர் பலி..! 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம் …!