அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் காவல் 14 நாட்களுக்கு நீட்டிப்பு..!
மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆந்திர எம்எல்சி கவிதா ஆகியோரின் காவல் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனைக்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
டெல்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, புதிய மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்ததை அடுத்து சிபிஐ நடத்திய விசாரணையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமால் இருந்தார். மேலும் இது தொடர்பாக கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பிறகும், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பிய நிலையில் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் “தான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும்” என புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கோரிக்கையை நிராகரித்தார், மேலும் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தார்.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை(ED) மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. தற்போதுவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதே போல் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) கைது செய்யப்பட்ட பின்னர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தெலுங்கானா எம்எல்சி மற்றும் முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை சிபிஐ கைது செய்தது. ஆம் ஆத்மி அரசின் கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது, அதே நேரத்தில் பணமோசடி வழக்கையும் ED விசாரித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆந்திர எம்எல்சி கவிதா ஆகியோரின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.