BJP: பணம் கொடுத்த விவகாரம்...! ஆட்சியரிடம் உண்மையை கூறிய அண்ணாமலை...!
ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் கோவை மக்களவைத் தொகுதியும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரச்சாரத்திற்கு சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், வீடியோவின் உண்மை நிலை குறித்தான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் EnMannEnMakkal யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.