தங்கர் பச்சானுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!! திடீரென மோதிக்கொண்ட பாஜக - பாமக தொண்டர்கள்..!!
கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தின் போது பாஜக - பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கடலூர் லோக்சபா தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது தொகுதி தவிர, மற்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக அண்ணாமலை இன்று கடலூருக்கு வருகை தந்தார். கடலூரில் உள்ள முதுநகர் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து பேசிய அண்ணாமலை, தங்கர் பச்சானுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் கூறிய 400 எம்.பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர் என்றும் பேசினார்.
இதற்கிடையே, அண்ணாமலை பிரச்சாரத்திற்கு வருகை தந்திருந்த பாஜக மற்றும் பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், முண்டியடித்து அண்ணாமலையின் முன்பாக நிற்க முயற்சி செய்தனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தில் நின்றிருந்த இரு தரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட போலீசார், உடனடியாக அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக 4 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பிரச்சாரக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Read More : நடிகர் மன்சூர் அலிகான் மீது மேலும் ஒரு வழக்கு..!! எதற்காக தெரியுமா..?