ADMK: 200 பேருக்கு பிரியாணி...! தேர்தல் நடத்தை விதி மீறிய அதிமுக முன்னாள் அமைச்சர்...! அதிரடி காட்டிய காவல்துறை...!
நெற்குன்றத்தில் தேர்தல் நடத்தை விதி மீறி அதிமுக கொடியேற்றி 200 பேருக்கு பிரியாணி வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகரில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமுறை மீறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கொடி ஏற்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக கோயம்பேடு காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என காவல்துறை கூறினர். ஆனால் அதிமுக தொண்டர்கள் காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சிக்கொடி ஏற்றக்கூடாது என்றும், அதேபோல் எந்த கட்சி சார்பாகவும் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும் தெரிவித்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பிரியாணி வழங்கி உள்ளனர். இதைக்கேட்டபோது அதிமுக தொண்டர்கள் மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். எனவே தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி விஏஓ காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து கோயம்பேடு காவல்துறை வழக்கு பதிந்து, தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர். தேர்தல் விதிமுறை மீறி காவல்துறை அனுமதி இல்லாமல் அதிமுக கொடி ஏற்றி அன்னதானம் வழங்கியது தெரியவந்தது.
தேர்தல் விதி
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. தேர்தல் பிரச்சாரங்களின்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றிநிறைய விதிமுறைகள் இருக்கின்றன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பெரிய குற்றம். அதில்ஈடுபடும் வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யக்கூட வாய்ப்புள்ளது.
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை எப்படி இருக்க வேண்டும், வாக்குச் சாவடியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் தேர்தல் கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன, வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.