For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக..! காரணம் என்ன..!

04:47 PM Jun 15, 2024 IST | Kathir
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக    காரணம் என்ன
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும்கிறது. திமுக பாமக, நாதக போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில், அதிமுக தரப்பில் யாரை வேட்பாளராக நிறுகொத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற அராஜக விடியா திமுக ஆட்சியில் 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை கழகம் புறக்கணிக்கிறது!

பொதுவாக தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
தமிழகத்தில் அலங்கோல ஆட்சியை நடத்தி வரும் திமுக-வினர், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையோடு அரசு எந்திரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதை நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.

"அராஜகம் என்றால் திமுக… திமுக என்றால் அராஜகம்”. திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
2006-ல், மைனாரிட்டி திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக-வினரால் வெளிப்படையாக நடத்தப்பட்ட வன்முறைகள், அராஜகங்கள்; தமிழகமெங்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் கடத்தப்பட்டது; தேர்தல் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டது; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்ற இடங்களில் தேர்தல் அதிகாரியை அச்சுறுத்தி, மிரட்டி, தி.மு.க. தான் வெற்றி பெற்றது என்று அறிவிக்கச் செய்ததை மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

அதே போல், 19.2.2022 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வினர் பணபலம், படைபலத்துடன் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களையும், வன்முறைகளையும், அராஜகங்களையும் கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து விடியா திமுக ஆட்சியில், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி, மக்கள் பெரும் அதிருப்தியை ஆளும் திமுக கூட்டணி மீது வெளிப்படுத்தினார்கள். இதனால் தோல்வி உறுதி என்று தெரிந்த திமுக, ஈவு இரக்கமற்ற வகையில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்தது. 'திருமங்கலம் பார்முலா' என்கிற பெயரில் மக்கள் வாக்குகளை விலைபேசியதைப் போல, 'ஈரோடு கிழக்கு பார்முலா' என்ற ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பதைப் போல், அடைத்து வாக்காளர்களை அருவருக்கத்தக்க ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியது.

எதிர்க்கட்சியின் பரப்புரைகள் மக்கள் காதுகளிலேயே விழாத அளவிற்கு அவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். "மக்களை அடைத்து வைத்தால், மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கே சென்று மக்களை சந்திப்பேன்" என நான் எச்சரித்த பிறகு, பேருந்துகளில் மக்களை அடைத்து சுற்றுலா அழைத்துச் செல்லும் புது பார்முலாவை அறிமுகப்படுத்தியது திமுக.

அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக-வின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. திமுக-வின் ‘மக்கள் அடைப்பு முகாம்கள்' ஈரோடு (கிழக்கு) தொகுதி முழுவதும் பரவலாக முளைத்திருந்தன. அந்த இடத்திற்கு வர மறுத்த அப்பாவி மக்கள் திமுக-வினரால் மிரட்டப்பட்டார்கள். அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டடிருந்த மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவும், வீட்டுக்குச் செல்லும் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் இரவு உணவு மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கி ஜனநாயகப் படுகொலை நடந்தேறியது.

திமுக-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

திமுக-வினர் செய்யும் அனைத்து அராஜகங்களையும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் (மாவட்ட ஆட்சித் தலைவர்), சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் பலமுறை நேரில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும், ஆளும் கட்சிக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயகப் படுகொலை அரங்கேறியது. அந்த வகையில், விடியா திமுக ஆட்சியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.

விடியா அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு குடும்பம் மட்டும் அசுர வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிகார துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுப்பது, வெற்று வாக்குறுதிகளை அளிப்பது; விளம்பரங்கள் செய்வது முதலான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக-வினரின் முகத்திரையைக் கிழித்து, விடியா திமுக ஆட்சியின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து, எதிர்வரும் 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், தமிழக மக்களின் பேராதரவோடும், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags :
Advertisement