விமானத்தில் ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம்! பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஏர் இந்தியா விமானத்தின் உடைந்த இருக்கை தொடர்பாக பயணி ஒருவர் பதிவிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1,000 செலுத்தி உள்ளார். விமானத்தில் ஏறியதும் அவரது இருக்கை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இருக்கையை புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அந்த பதிவில் “ஏப்ரல் 4 ஆம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற போது ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1000 செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு எனது இருக்கை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா?” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது பதிவுடன் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தையும் டேக் செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் அவருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதில் "ஏமாற்றம் அளிக்கும் அனுபவத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து உங்கள் முன்பதிவு விபரங்களை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். சரிபார்த்து உங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.