ஒரு ஏக்கருக்கு ரூ.80,000 மானியம்...! விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் திட்டம்...!
பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால் பல்வேறு விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். அந்த வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி ஒரு மானிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவது பலருக்குத் தெரிவதில்லை. அப்படி ஒரு மானிய திட்டத்தை பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசு சார்பில் பீா்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய், அவரைக்காய் போன்ற கொடியில் வளரும் காய்கறிகளை பந்தல் அமைத்து சாகுபடி செய்ய நிதியுதவி வழங்கப்படுகிறது. தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்த பந்தல் அமைக்க மானியம் வழங்கி வருகிறது .
பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், எஃப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கு சென்று மானியம் பெறலாம்.