For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறு பிழைக்கு ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது...! பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு...!

10:18 AM May 11, 2024 IST | Vignesh
சிறு பிழைக்கு  ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது     பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
Advertisement

சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஆவணப்பதிவு தொடர்பாக பதிவு அலுவலகத்திற்கு வரும் ஆவணதாரர்களால் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகள் தொடர்பாக உரிய காரணங்களின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும், அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சார்பதிவாளர்களால் பிற அலுவலர்களுக்கு மற்றும் பிற சார்பதிவகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கடித போக்குவரத்து ஆவணதாரர்களாகிய அவர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை எனவும் பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.

ஒரு நேர்வில் வங்கி ஒன்றால் உரியவாறு எழுதப்பட்ட விற்பனைச் சான்றாவணம் (Sale Certificate) 2 கோர்வையின் பொருட்டு ஒரு சார்பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அச்சார்பதிவாளர் அந்த ஆவணத்தில் கண்டுள்ள சொத்தானது தமது அலுவலக வரம்பிற்கு உட்பட்டதன்று என பிறிதொரு சார்பதிவகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். இது குறித்து தொடர்புடைய வங்கிக்கோ, ஆவணதாரர்களுக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்து ஆவணதாரர் அவதியுற்றதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளது.

இவ்வாறான நேர்வுகளை இனிவரும் காலங்களில் அறவே நிகழாவாறு சார்பதிவாளர்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் குறித்த நிலையினை ஆவணதாரர்களுக்கு உரியவாறு தெரிவித்திடல் வேண்டுமென்றும் ஆவணதாரர்களால் உடனுக்குடன் சரிசெய்யத்தக்க சிறு பிழைகளுக்காக எக்காரணம் கொண்டும் ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement