A.R.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி...! ரூ.67,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு...!
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிய கரூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் டிக்கெட் தொகையுடன் சேர்த்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட நுகர்வு குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்தது. மழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 12ஆம் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரூ.1,000-க்கு டிக்கெட் வாங்கியவர்கள் வேறொரு பிரிவுக்கான இருக்கையில் சென்றது, அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்தது போன்ற காரணத்தால் டிக்கெட் பெற்றவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை இணையத்தில் வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் குடியிருக்கும் அஸ்வின், மணிகண்டன் என்ற குடும்பத்தினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தலைமையில் நடைபெறும் என விளம்பரம் செய்த அடிப்படையில் அதை நம்பி 12,000 செலுத்தி அதற்கான டிக்கெட்டை பெற்றனர். மழையின் காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தங்களால் பங்கேற்க இயலாது என கூறி தமிழ் செலுத்திய கட்டணத்தை திருப்பி செலுத்துமாறு இமெயில் மூலம் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் நிறுவனம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் தாங்கள் செலுத்திய தொகையை மீண்டும் செலுத்த கோரி அந்த நிறுவனம் மீது கரூர் மாவட்ட நுகர்வோர் குறைவு ஆணையத்தில் குடும்பத்தினர் வழக்கு பதிவு செய்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் டிக்கெட் தொகையுடன் சேர்த்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட நுகர்வு குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.