இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற 8 பேர் கைது..!
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற இலங்கை தமிழர்கள் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் அடுத்து தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த சிலரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை தமிழர்கள் இருவரை சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு அனுப்பிவைக்க திட்டமிட்டது தெரிய வந்தது.
இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த இருவர் விமானம் மூலமாக கடந்த 2017ல் சென்னைக்கு வந்துள்ளனர். சென்னைக்கு வந்தவர்கள் அகதியாக பதிவு செய்ய முயல்கிறார்கள், ஆனால் விமானத்தில் வந்த காரணத்தால் அவர்களால் அகதியாக பதிவு செய்ய முடியவில்லை என்பதால் தங்கச்சிமடம் வழியாக இலங்கைக்கு சென்ற பிறகு, அங்கிருந்து அகதியாக திரும்பி வரலாம் என்று 6 பேரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பிறகு இன்று அதிகாலை 4மணிக்கு படகு மூலம் இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.