தமிழகத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 6.80 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல்...!
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 6.80 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என இணை அமைச்சர் டோக்கன் சாகு தெரிவித்துள்ளார்.
நிலம் மற்றும் குடியிருப்புகள் ஆகியவை மாநில அரசு செயல்படுத்தக் கூடியவை. எனவே, தங்களது குடிமக்களுக்காக வீட்டுவசதி தொடர்பான திட்டங்களை செயல்படுத்துபவை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள். எனினும், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் மத்திய நிதியுதவியை வழங்கி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் உதவிவருகிறது. இதில், நாடு முழுவதும் தகுதிவாய்ந்த அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை வசதிகளுடன்கூடிய கான்கிரீட் வீடுகளை 25.06.2015 முதல் வழங்கி வருகிறது.
இந்தத் திட்டமானது, நான்கு முறைகளில் அமல்படுத்தப்படுகிறது. அதாவது, பயனாளிகள் தலைமையில் கட்டுமானம், கூட்டாக இணைந்து உரிய வீட்டுவசதியை வழங்குவது, குடியிருப்பு பகுதியில் குடிசைகள் மறுகட்டமைப்பு, கடன் அடிப்படையிலான மானியத் திட்டம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நகர்ப்புற திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறையின் செயல்பாட்டுடன் இணைந்து மாநில அரசின்கீழ் உள்ள எந்தவொரு ஆணையம் அல்லது தொழில் வளர்ச்சி ஆணையம், சிறப்பு பகுதி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றின் கீழ் வரும் வளர்ச்சிப் பகுதிகள், அறிவிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட பகுதிகள் நகரியங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒட்டுமொத்த நகர்ப்புற பகுதிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் கழிவறை, நீர் விநியோகம்,, மின்சாரம், சமையல் அறை ஆகிய வசதிகள் இருக்கும். இந்த வீடுகளை பெண்களின் பெயரில் அல்லது கூட்டாக இணைந்து வழங்குவதன்மூலம், வீட்டின் உரிமையை வழங்கி பெண்கள் மேம்பாட்டை இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், தனியாக வாழும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் சமூகத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வீடுகளை வேகமாகவும், தரமாகவும் கட்டுவதற்காக நவீன,, புத்தாக்க மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை பயன்படுதத தொழில்நுட்ப துணை இயக்கத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் வீடுகள் கட்டுமானத்துக்கு எந்தவொரு வரம்பும் விதிக்கப்படவில்லை. மாநில அளவில் தேவையின் அடிப்படையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பட்டியலை தயாரித்து, மாநில அளவிலான ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கும். உரிய மத்திய நிதியை வழங்குவது குறித்து மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்யும்.
தமிழ்நாடு அரசு அளித்த திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில், 15.07.2024 வரை பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், 6.80 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 6.63 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நடைபெறுகிறது. இவற்றில் 5.70 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறைவடைந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு அரசு ஒப்புதலுக்காக வழங்கிய பரிந்துரைகள் எதுவும் நிலுவையில் இல்லை என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டோக்கன் சாகு தெரிவித்துள்ளார்.