கோழிப்பண்ணை அலுவலகத்தில் 32 கோடி ரூபாய் பறிமுதல்..! சிக்கிய அதிமுக ஆதரவாளர்!
பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது சகோதரர் சரவண முருகன். இருவரும் சேர்ந்து ஊஞ்சவேலம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களில் எம்பிஎஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்து வந்தன. வெங்கடேசா காலனியில் உள்ள கோழிப்பண்ணை தலைமை அலுவலகத்திற்கு நேற்று இரவு 11 மணியளவில் திடீரென வந்த வருமான வரித்துறையினர் அங்கு சோதனை செய்தனர்.
நீண்ட நேரம் சோதனைக்கு பிறகு, கணக்கில் வராத ரொக்கம் ரூ.32 கோடி இருப்பதை கண்டுபிடித்தனர். தேர்தல் நேரத்தில் கணக்கில் வராத பணம் ரூ.32 கோடி பிடிபட்டதால் இது வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருள்முருகன், சரவணமுருகன் ஆகிய இருவரும் அதிமுக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.