தேசிய நெடுஞ்சாலைகளில் 1,000 ஓய்வு இல்லங்கள் கட்டப்படும்!… பிரதமர் மோடி அறிவிப்பு!
தேசிய நெடுஞ்சாலைகளில் முதற்கட்டமாக டிரக் மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்காக 1,000 மேம்பட்ட ஓய்வு இல்லங்கள் கட்டப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உரையாற்றிய அவர், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் கூறினார். 2014ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளில் நாட்டில் சுமார் 12 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், 2014ஆம் ஆண்டு முதல் 21 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் சுமார் 2000 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஆனால் கடந்த பத்து வருடங்களில் 12 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பயணிகள் வாகனங்களில் ஏறக்குறைய 60 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர் விளக்கினார். கடல் மற்றும் மலைகளுக்கு சவால் விடும் வகையில் சாதனை படைத்து பொறியியல் அற்புதங்களை உருவாக்கி வருகிறோம் என்றார். அடல் டன்னல் முதல் அடல் சேது வரையிலான இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு புதிய சாதனைகளை படைத்து வருவதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் 75 புதிய விமான நிலையங்கள் மற்றும் கிட்டத்தட்ட 4 லட்சம் கிராமப்புற சாலைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு அவர் தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுத்தார்.