அதிரடி...! நீட் போன்ற போட்டி தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை...!
மத்திய அரசு நடத்தும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ; பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024-ன் பிரிவு 1ன் துணைப் பிரிவு (2)-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்த சட்டம் 2024, ஜூன் 21-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் எத்தகைய செயல்கள் சட்டப்படி குற்றம் என்பதையும், அவற்றுக்கான தண்டனை விவரங்களையும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) வெளியிட்டுள்ளது. அதன்படி, "வினாத்தாளை கசியவிடுதல், பதில்களை வெளியிடுதல், பொதுத் தேர்வின்போது விண்ணப்பதாரருக்கு உதவுதல், கணினி வலையமைப்பை சேதப்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள். இந்த குற்றச் செயலில் தனி நபரோ, குழுவோ, அல்லது நிறுவனமோ ஈடுபட்டால் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவை தவிர, ஏமாற்றுவதற்கு அல்லது பண ஆதாயத்துக்காக போலி இணையதளத்தை உருவாக்குதல், போலி தேர்வு நடத்துதல்,போலி அனுமதி அட்டைகளை வழங்குதல், தேர்வர்களுக்கான தேர்வு தேதிகள் மற்றும் ஷிப்ட்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுதல் ஆகியவை இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களில் அடங்கும். இந்த சட்டத்தின் கீழ் நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
தனிநபரோ அல்லது குழுவோ அல்லது தேர்வு நடத்தும் அதிகாரிகளோ, நிறுவனங்களோ இத்தகைய குற்றங்களைச் செய்தால் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.1 கோடிக்கும் குறையாத அளவில் அபராதமும் விதிக்கப்படும். வினாத்தாள் கசிவு மற்றும் விடைத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது. வாரண்ட் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்ய முடியும். தவறு நடந்தது அறிந்தும், அது பற்றி புகார் அளிக்காத தேர்வை நடத்துபவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். மேலும், தேர்வு நடத்தும் அமைப்புகளில் (என்டிஏ போன்ற அமைப்புகள்) இருக்கும் மூத்த அதிகாரிகளுக்கு தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதனுடன், அவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படலாம். தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தேர்வு நடத்துபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.