கோவிட் காலத்தில் 1.64 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!
அரசின் தரவு தளத்தில் உள்ள சிக்கல் காரணமாக, கொரோனா காலத்தில், 1.64 லட்சம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை என, தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த, 2020-ல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கட்டட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழந்திருந்தனர். அவர்களுக்கு பொருளாதார உதவியாக 2,000 முதல் 3,000 ரூபாய் வீதம் என, 12.14 லட்சம் தொழிலாளர்களுக்கு, நிதியுதவி வழங்க ரூ.248.29 கோடி ஒதுக்கீடு செய்தது.
அதில், 10.50 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், அரசின் தரவுகளின் உள்ள சிக்கல்கள் காரணமாக, 1.64 லட்சம் பேர் என, 14 சதவீதம் தகுதியான தொழிலாளர்களுக்கு கொரோனா கால நிதியுதவி கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1,729 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நிதியுதவி வழங்கப்பட்டதால், 33.31 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகி இருப்பது தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.