தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வர தமிழகம் என்ன பறவைகள் சரணாலயமா..? CM ஸ்டாலின் கேள்வி
தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா..? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தி.மு.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; இந்த மாமதுரைக்கும், சிவகங்கைக்கும் அறிவின் அடையாளமாக, வீரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் அடையாளமாக, நம்முடைய அரசு கொடுத்திருக்கும் முத்தான மூன்று திட்டங்கள் என்ன? தி.மு.க. என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல. தமிழ்ச் சமுதாயத்தை தட்டியெழுப்பும் அறிவியக்கம் என்பதற்கு அடையாளமாக, கழகத்திற்கு மட்டும் அறிவாலயம் கட்டாமல் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் பயனளிக்கும் அறிவு ஆலயங்களை கட்டி வருகிறோம்.
மண்புழுவாக ஊர்ந்து, பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்த பழனிசாமியால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நன்மை என்று ஏதாவது இருக்கிறதா..? துரோகத்திற்கு உருவம் இருந்தால், அது பழனிசாமிதான் என்று உலகத்திற்கு காட்டியதைவிட வேறு என்ன செய்திருக்கிறார்...? மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்திற்குதான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. நம் அரசு பொறுப்பேற்று இன்றுடன் 1069 நாட்கள்தான் ஆகிறது. ஆனால், 1556 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம் என்றார்.
தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்?தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்..?