"அமைதியோ அமைதி" எடப்பாடி பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்" அமைச்சர் ரகுபதி காட்டம்
சில தினங்களுக்கு முன் மக்கள் அவையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள்.
கடவுளின் பெயரை பலமுறை சொன்னால் அவர்களுக்கு சொர்க்கத்தில் ஆவது இடம் கிடைக்கும். அம்பேத்கரின் பெயரை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்துங்கள். ஆனால் அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தது. இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர், எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அம்பேத்கரை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவமதித்தற்கு முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அமைதியோ அமைதி என இருக்கிறார் என்று திமுக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல், யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்றும் கேட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் ரகுபதியின் பதிவில், "எங்கே பழனிசாமி? அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள்.
சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார். ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி.
யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று" பதிவிட்டுள்ளார்.
Read More: ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை.. 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு..!! – தவெக